வங்கிகளின் கடன் வழங்கல் மற்றும் டெபாசிட் திரட்டல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளிலுமே தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜூன் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 9.92 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.96.52 லட்சம் கோடியாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே கால அளவில் 85.94 லட்சம் கோடியாக காணப்பட்டது. டெபாசிட் வளர்ச்சியும் ரூ.114.08 லட்சம் கோடியிலிருந்து 12.31 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.125.40 லட்சம் கோடியாக இருந்தது.
இதற்கு முந்தைய மே 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 12.70 சதவீதம் உயர்ந்து ரூ.96.22 லட்சம் கோடியாகவும், டெபாசிட் 10.09 சதவீதம் அதிகரித்து ரூ.124.98 லட்சம் கோடியாகவும் இருந்தன.
கடந்தாண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரலில் உணவு சாரா துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் 10.7 சதவீதத்திலிருந்து உயர்ந்து 11.9 சதவீதத்தை எட்டியுள்ளது.
அதேபோன்று வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் 5.9 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாக அதிகரித்தது.
அதேசமயம், சேவை துறைக்கு வழங்கப்பட்ட கடன் 20.7 சதவீதத்திலிருந்து 16.8 சதவீதமாகவும், தனிநபர் கடன் 19.1 சதவீதத்திலிருந்து 15.7 சதவீதமாகவும் தொய்வைக் கண்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில் ஆலைகளுக்கு வழங்கப்பட்ட கடன் வெறும் 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை கண்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரலில் அது 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.