கடந்த நிதியாண்டில் ரூ.18 ஆயிரம் கோடி வாராக் கடன் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான தீனபந்து மொஹபத்ரா தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மொஹபத்ரா கூறியது:
ஏனைய வங்கிகளுடன் ஒப்பிடும்போது பேங்க் ஆஃப் இந்தியா அதிக அளவிலான வாராக் கடன்களை வசூல் செய்துள்ளது. நாங்கள் எங்கள் மேலாளர்களுக்கு வகுத்து கொடுத்த கொள்கையின் அடிப்படையில் வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இது சாத்தியமாகி உள்ளது.
ரிசர்வ் வங்கி, ரூ.6,939 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு (என்சிஎல்டி) பரிந்துரைத்துள்ளது. இது, வங்கியின் வாராக் கடன் வசூல் நடைமுறைகள் மேலும் வேகமெடுக்க உதவிகரமாக இருக்கும்.
ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை விற்க வங்கி அண்மையில் முடிவு செய்தது. இதற்கான ஏல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன. எனவே, அடுத்த 2 காலாண்டுகளில் வாராக் கடன் விற்பனை கணிசமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கியின் வாராக் கடன் வசூலை அதிகரிக்க 4 புதிய திட்டங்களை செயல்படுத்த பேங்க் ஆஃப் இந்தியா முன்வந்துள்ளது. ஒன்று சமாதான் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தப்படாத கடன்களை கண்டறிந்து, அதனை வசூல் செய்வது. இரண்டாவது, பிரிவென்ஷன் திட்டத்தின் கீழ், வாராக் கடன் அதிகரிப்பதை தடுப்பது. மூன்றாவது, மொபிலிசேஷன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மண்டலத்திலும் அதிக விருப்பமான சொத்துகள் கண்டறியப்பட்டு கடன் வாங்குவது ஊக்குவிக்கப்படும்.
நான்காவது திட்டம் அரசின் டெபாசிட்டுகளை பாதுகாப்பாக அப்படியே தக்க வைப்பது என்றார் அவர்.
இந்த சந்திப்பின்போது அவ்வங்கியின் தென் மண்டல பொது மேலாளர் ராஜ் குமார் மித்ரா, செயல் இயக்குநர் சைதன்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.