கடந்த 2018-ஆம் ஆண்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து பிசிஜி-ஐபிஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டில் வங்கிகளின் நிதி நிலை மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் சீர்திருத்தம் அமலாக்கம் செய்யப்பட்டதில் பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது.
இதற்காக, அந்த வங்கி 100 மதிப்பெண்களில் 78.4 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா (77.8), எஸ்பிஐ (74.6), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (69), கனரா வங்கி (67.5), சிண்டிகேட் வங்கி (67.1) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை கூறுகையில், தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கை வங்கிகளின் போட்டி தன்மையை அதிகரிக்கவும், செயல்பாடுகளை மேலும் ஊக்குவிக்கவும் உதவும். பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய ஆரோக்கியமான மிகப்பெரிய வங்கியை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.