சாதகமான சூழல் காணப்பட்டதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் குறையும் சூழ்நிலை உருவாகியதையடுத்து முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தனர். இந்த நிலையில், அந்நிய முதலீட்டு வரத்தும் சாதகமாக இருந்தது இந்திய பங்குச் சந்தைகளின் வலுவான ஏற்றத்துக்கு துணை புரிந்தது.
பொறியியல் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், எண்ணெய்-எரிவாயு பங்குகளுக்கு சந்தையில் அதிக தேவை காணப்பட்டது. இதன் காரணமாக, அத்துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் அதிகரித்து 36,063 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 10,863 புள்ளிகளில் நிலைத்தது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு திங்கள்கிழமை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.