இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் திடீர் எழுச்சி கண்டது.
அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் தங்களது முதலீட்டை கணிசமான அளவுக்கு அதிகரித்தன. இதன் காரணமாக, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. சர்வதேச அளவில் காணப்பட்ட சாதகமான சூழலும் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு கைகொடுத்தது.
வங்கி துறை பங்குகளில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அத்துறை குறியீட்டெண் 2.19 சதவீதம் ஏற்றமடைந்தது. இதையடுத்து, மின்சாரம் 1.70 சதவீதமும், பொதுத் துறை 1.31 சதவீதமும், உலோகம் 1.11 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டெண் 1.08 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து தகவல் துறை குறியீட்டெண் 0.58 சதவீதம் குறைந்தது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து நரேஷ் கோயல் விலகியதன் எதிரொலியாக அந்நிறுவனப் பங்கின் விலை 7 சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோன்று பொதுத் துறையைச் சேர்ந்த என்டிபிசி பங்கின் விலை 3.28 சதவீதமும், எஸ்பிஐ 3.23 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3 சதவீதமும் அதிகரித்தன.
இவைதவிர, வேதாந்தா பங்கின் விலை 3.18 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 2.75 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ் 2.72 சதவீதமும், யெஸ் வங்கி 2.71 சதவீதமும், கோட்டக் வங்கி 2.60 சதவீதமும், ஏஷியன் பெயின்ட்ஸ் 2.02 சதவீதமும் உயர்ந்தன.
இருப்பினும், லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதால் இன்ஃபோசிஸ் பங்கின் விலை 1.23 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 0.85 சதவீதமும், ஐடிசி 0.68 சதவீதமும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 424 புள்ளிகள் அதிகரித்து 38,233 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 129 புள்ளிகள் உயர்ந்து 11,483 புள்ளிகளில் நிலைத்தது.