முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியா (டிஐஐ) கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.55 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-19 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் டிஐஐ நிறுவனம் தனிப்பட்ட முறையில் ரூ.1,224 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.1,109 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். வரிக்கு முந்தைய லாபம் 75 சதவீதம் அதிகரித்து ரூ.86 கோடியாக காணப்பட்டது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.21 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.55 கோடியானது.
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.5,286 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2017-18 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகமாகும். வரிக்கு முந்தைய லாபம் 70 சதவீதம் உயர்ந்து ரூ.371 கோடியாக காணப்பட்டது.
கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த ரொக்க கையிருப்பாக ரூ.208 கோடி உள்ளது என அந்த செய்திக்குறிப்பில் டிஐஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.