பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் ரூ.251 கோடி
பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா நான்காம் காலாண்டில் ரூ.251.79 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபி-யிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது: சென்ற 2018-19 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.12,417.08 கோடியாக இருந்தது. முந்தைய 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.9,596.86 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம். கடந்த 2017-18 நிதியாண்டில் நான்காம் காலாண்டில் வங்கி ரூ.3,969 கோடி நிகர இழப்பை கண்டிருந்த நிலையில், 2018-19 நிதியாண்டின் இதே கால அளவில் வங்கி ரூ.251.79 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதற்கு, வாராக் கடன் அளவு கணிசமாக குறைந்ததே முக்கிய காரணம்.
கடந்த 2018 மார்ச் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட மொத்த கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 16.58 சதவீதத்திலிருந்து 15.84 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர அளவிலான வாராக் கடன் விகிதமும் 8.26 சதவீதத்திலிருந்து சரிந்து 5.61 சதவீதமாகியுள்ளது.
2017-18 முழு நிதியாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.6,043.71 கோடியாக காணப்பட்ட நிலையில், 2018-19 நிதியாண்டில் இது ரூ.5,546.90 கோடியாக குறைந்துள்ளது. வருவாய் ரூ.43,805.17 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.45,899.32 கோடியானது.
கடந்தாண்டு டிசம்பர் மற்றும் நடப்பாண்டு பிப்ரவரியில் இரண்டு கட்டங்களாக வங்கிக்கு மத்திய அரசு ரூ.14,724 கோடி மூலதனத்தை வழங்கியுள்ளதாக செபி-யிடம் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.