முருகப்பா குழுமத்தின் லாபம் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.2,432 கோடியில் இருந்து ரூ.2,880 கோடியாக உயர்ந்துள்ளது. இது 18 சதவீதம் உயர்வு ஆகும்.
2018-19-ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு, முருகப்பா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீதரன் ரங்கராஜன் பேசியது: கடந்த 2017-18 நிதியாண்டில் குழுமத்தின் வருவாய் ரூ.33,079 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 2018-19-ஆம் நிதியாண்டில் வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ரூ.36,893 கோடியானது. குழுமத்தின் லாபம் 2017-18 நிதியாண்டில் ரூ.2,432 கோடியாக இருந்தது.
2018-19-ஆம் நிதியாண்டில் இது ரூ.2,880 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 18 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்றார் அவர். குழுமத்தின் செயல் தலைவர் எம் எம் முருகப்பன் பேசியது: முக்கிய வியாபாரத்தில் உறுதியற்ற தன்மை இருந்தபோதிலும், 2019-20 ஆண்டில் சுமார் ரூ.1,250 கோடி முதல் ரூ.1,300 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.
இது எங்கள் குழுமத்துக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. இருப்பினும், உண்மையில் சில பிரதான துறைகளில் அதாவது உரம், சர்க்கரை, பொறியியல், நிதி சேவைகளில் சவால்கள் இருந்தன. தேர்தலுக்குப் பிறகு நிலைத்தன்மையை எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தேவையை ஊக்கப்படுத்தி, முதல் அரையாண்டில் இழப்பு ஈடுகட்டப்படும்.
நிறுவனங்களின் வசதிகளை அதிகரிக்க மூலதன செலவு திட்டத்துக்காக ரூ.2,000 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.750 கோடி ஏற்கெனவே செலவிடப்பட்டுள்ளது. சோழமண்டல வீட்டு நிதி நிறுவனத்தின் துணை நிதி நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.