ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2.2 சதவீதம் குறைந்துள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம், இரண்டாவது காலாண்டுக்கான அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 2.2 சதவீதம் சரிந்து, ரூ.4,019 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 4,110 கோடியாக இருந்தது. நிகர லாபம் சற்று குறைந்துள்ள போதிலும், நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 9.8 சதவீதம் அதிகரித்து, ரூ.22,629 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.20,609 கோடியாக இருந்தது. அறிக்கை வெளியீட்டுக்குப் பிறகு, பெங்களூரில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
இன்ஃபோசிஸ் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெளிவாகக் காணப்படுகின்றன. வருவாயை அதிகரிக்கச் செய்வது, தகவல் தொழில்நுட்ப சேவையை விரிவுபடுத்துவது, புதிய பணிகளுக்காக பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்வது என பல்வேறு வழிகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். ஐரோப்பிய சந்தையில் பிரெக்ஸிட் விவகாரம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்தது. இருப்பினும், அந்த பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கையாண்டோம் என்றார் அவர்.