காரீப் பருவ உணவுதானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018-19 பயிர் ஆண்டின் (ஜூலை-ஜூன்), காரீப் பருவத்தில் உணவுதானிய உற்பத்தி 14.17 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2019-20 பயிர் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் நெல் மற்றும் பருப்பு வகைககள் விளைச்சல் கடந்தாண்டைக் காட்டிலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, உணவுதானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நெல் உற்பத்தி 10.21 கோடி டன்னிலிருந்து 10.03 கோடி டன்னாகவும், பருப்பு வகைகள் உற்பத்தி 85.9 லட்சம் டன்னிலிருந்து 82.3 லட்சம் டன்னாகவும் குறையும் என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.