கரோனா தொற்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்திய நிறுவனங்களை எல்லையோர நாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவதைக் கட்டுப்படுத்த, அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று சீனாவைப் பாதிக்கத் தொடங்கி, உலகளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இந்த நோய்த் தொற்று காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் இழப்புகளையும் சரிவையும் சந்திக்க நேரிடவுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு விற்பனையில் சரிவைச் சந்தித்து வரும் நிறுவனங்களை, சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறையை கடுமையாக்கின.
இந்த நிலையில், இந்தியாவும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன் அனுமதி கட்டாயம் என்ற வகையில் திருத்தம் செய்துள்ளது.
இதுகுறித்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்கள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட குறிப்பில்,
"இந்தியாவின் எல்லையோர நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டு குடிமகனாக இருந்தாலோ அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டில் இருப்பவராக இருந்தாலோ, அரசின் ஊடாகவே முதலீடு செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளது.