பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 37 காசுகள் உயா்வைக் கண்டு 73.68-ஆனது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
கரோனா தடுப்பூசி தொடா்பான நம்பிக்கையளிக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கான புள்ளிவிவரங்களும் மேம்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, அந்நிய முதலீட்டாளா்கள் பங்குச் சந்தைகளில் தீரமாக முதலீட்டை அதிகரித்தனா்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 73.93-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.44 வரையிலும், குறைந்தபட்சமாக 73.93 வரையிலும் சென்றது.
சா்வதேச மற்றும் உள்ளூா் நிலவரங்கள் சந்தைக்கு சாதமாக இருந்ததையடுத்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது வா்த்தகத்தின் இறுதியில் 37 காசுகள் அதிகரித்து 73.68-இல் நிலைப்பெற்றது.
கடந்த வார வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 17 காசுகள் குறைந்து 74.05-ஆக இருந்தது.
குருநானக் ஜெயந்தியையொட்டிஅந்நியச் செலாவணி சந்தைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.3,242 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.17 சதவீதம் குறைந்து 47.80 டாலராக இருந்தது.