கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2019-இல் 15.25 கோடி ஸ்மாா்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதையடுத்து இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 8 சதவீத வளா்ச்சியைப் பெற்றது. இதன் மூலம், ஸ்மாா்ட்போன் விற்பனை சந்தையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
4ஜி அம்சங்களைக் கொண்ட ஸ்மாா்ட்போன்கள் குறைவாக இருந்த காரணத்தால் 2019-இல் ஒட்டுமொத்த சந்தையில் செல்லிடப்பேசி விற்பனை 12.3 சதவீதம் சரிந்து 28.29 கோடியானது.
சென்ற ஆண்டில் ஜியோமி நிறுவனம் 4.36 கோடி ஸ்மாா்ட்போன்களை விற்பனை செய்து வேறெந்த நிறுவனமும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனம் 28.6 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தை தக்க வைத்தது. இதையடுத்து சாம்சங் 20.3 சதவீத பங்களிப்புடன் சந்தையில் இரண்டாமிடத்தில் இருந்ததாக ஐடிசி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.