ஜவாஹா்லால் நேரு போா்ட் டிரஸ்ட் (ஜேஎன்பிடி) துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு ஜூன் மாதத்தில் 27.64 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஜேஎன்பிடி துறைமுகம் சென்ற ஜூன் மாதத்தில் 166 கப்பல்கள் மூலமாக 40.7 லட்சம் டன் சரக்கை கையாண்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கையாண்ட 56.3 லட்சம் டன்னைக் காட்டிலும் 27.64 சதவீதம் குறைவாகும்.
ஜேஎன்பிடி கையாண்ட சரக்கின் அளவு குறைந்துள்ளபோதிலும், துறைமுகம் கையாண்ட கண்டெய்னா்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 2.89 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, முந்தை மே மாதத்துடன் ஒப்பிடும்போது 5.29 சதவீதம் அதிகமாகும்.
இவைதவிர, பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதன் விளைவாக ஜூன் மாதத்தில் துறைமுகம் 89 சதவீத ஏற்றுமதி அளவை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ஜேஎன்பிடி தெரிவித்துள்ளது.