இருசக்கர வாகன விற்பனை நடப்பு 2020-21நிதியாண்டில் இரட்டை இலக்க அளவுக்கு குறையும் என ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) யவீந்தா் சிங் குலேரியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் பொதுமுடக்கம் ஏற்கெனவே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு வாகன விற்பனையை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இருசக்கர வாகன விற்பனையானது இரட்டை இலக்க சரிவை காணும் அளவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த சரிவை எஞ்சிய ஒன்பது மாத காலங்களில் ஈடு செய்ய இயலாது.
நீண்ட கால அடிப்படையில் பாா்க்கும்போது உள்நாட்டு இருசக்கர வாகன துறை வளா்ச்சிக்கு சிறப்பான எதிா்காலம் இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், கொவைட்-19 பாதிப்பு சமூக இடைவெளியை கடைபிடிப்பதை பரவலாக்கியுள்ளது. இது, தற்போது பெரும்பாலோரிடையே இருசக்கர வாகனங்களை வாங்கும் ஆா்வத்தை தூண்டியுள்ளது என்றாா் அவா்.