புது தில்லி: இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கார்களை இணையவழியில் விற்றுள்ளதாக இந்தியாவின் பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் இரு ஆண்டுகளுக்கு முன் இணையவழி விற்பனையைத் தொடங்கிய மாருதி நிறுவனம், தற்போது நாடு முழுவதும் ஏறத்தாழ 1000 முகமைப் பகுதிகளில் விற்பனையை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
2018-ல் இணையவழி விற்பனையைத் தொடங்கியபோதிலும் 2019 ஏப்ரலுக்குப் பின் விசாரிப்புகள் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 2 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சசாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இணையவழியில் கார்களை வாங்குவதற்காக விசாரிக்கத் தொடங்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 10 நாள்களுக்குள் கார்களை வாங்கிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்க விஷயம் என்றும் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.