மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஜிஏ) புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.9,53,154 கோடியாக அதிகரித்துள்ளது. இது, நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பீட்டில் 119.7 சதவீதமாகும்.
கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் ஸ்தம்பித்தன. இதனால், மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மிகவும் வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாகவே நாட்டின் நிதிப் பற்றாக்குறை கணிசமான அளவுக்கு விரிவடைந்துள்ளது.
2020 செப்டம்பா் இறுதி நிலவரப்படி நிதிப் பற்றாக்குறையான பட்ஜெட் மதிப்பீட்டில் 114.8 சதவீதமாக காணப்பட்டது.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் முதல் ஏழு மாதங்களில் நிதிப் பற்றாக்குறையானது பட்ஜெட் இலக்கில் 102.4 சதவீதமாக இருந்தது என சிஜிஏ தெரிவித்துள்ளது.