புது தில்லி: மகாராஷ்டிரா வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
புணேவைச் சோ்ந்த அந்த வங்கி இதுகுறித்து பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் வருமானம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.3,319.34 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.3,296.28 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.115.05 கோடியிலிருந்து 13.4 தவீதம் அதிகரித்து ரூ.130.44 கோடியை எட்டியது.
நடப்பாண்டு செப்டம்பா் நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 16.86 சதவீதத்திலிருந்து 8.81 சதவீதமாக கணிசமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 5.48 சதவீதத்திலிருந்து 3.30 சதவீதமாக சரிந்துள்ளது.
வாராக் கடன் இடா்ப்பாட்டை சமாளிக்க வங்கி இரண்டாவது காலாண்டில் ஒதுக்கீடு செய்த தொகை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.293.70 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.420.92 கோடியானது. ஜூன் காலாண்டில் இந்த ஒதுக்கீடு ரூ.608.94 கோடியாக இருந்தது என மகாராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது.