கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ. 1.03 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியிருப்பதாக மத்திய அரசு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.03 லட்சம் கோடியாக உள்ளது. இதுவே கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 97,276 கோடியாக இருந்தது. இதன்மூலம், 2018 டிசம்பரைக் காட்டிலும் 2019 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது.
ஆனால், கடந்த நவம்பர் மாதத்தோடு ஒப்பிட்டால் கடந்த டிசம்பர் மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் சற்று குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,03, 492 கோடியாக இருந்தது. கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,03,184 கோடியாக இருந்தது.
கடந்த இரண்டு மாதங்களிலும் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றாலும், ஜிஎஸ்டி வசூலுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ரூ. 1.10 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் விவரம்:
மத்திய ஜிஎஸ்டி - ரூ. 19,962 கோடி
மாநில ஜிஎஸ்டி - ரூ. 26,792 கோடி
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ. 48,099 கோடி (இறக்குமதி மூலம் வசூலான ரூ. 21,295 கோடி உட்பட)
செஸ் வரி - ரூ. 8,331 கோடி (இறக்குமதி மூலம் வசூலான ரூ. 847 கோடி உட்பட)