தனியாா்துறையைச் சோ்ந்த பெடரல் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.440.64 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
நடப்பு நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,738.22 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,299.96 கோடியாக இருந்தது.
நிகர லாபம் ரூ.333.63 கோடியிலிருந்து 32.1 சதவீதம் அதிகரித்து ரூ.440.64 கோடியை எட்டியது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 3.14 சதவீதமாக காணப்பட்ட மொத்த வாராக் கடன் விகிதம் 2.99 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர அளவிலான வராக் கடனும் 1.72 சதவீதத்திலிருந்து 1.63 சதவீதமாக சரிந்துள்ளதாக பங்குச் சந்தையிடம் பெடரல் வங்கி தெரிவித்துள்ளது.