கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக கார்ப்பரேட் இந்தியா கடுமையான சவாலை சந்தித்துள்ளது. தொழில் துறை முடங்கியது. பங்கு சந்தையும் ஏற்ற}இறக்கத்துடன் கணிக்க முடியாத நிலையில் உள்ளது. மொத்தத்தில் உலகளாவிய நிலையில் அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது கரோனா. இதற்கு ஐபிஓ (Intial Public Offering) என்று அழைக்கப்படும் முதல் நிலைச் சந்தையும் விதி விலக்கு அல்ல. அதாவது கரோனா தாக்கத்தால் முதல் நிலைச் சந்தைக்கு மவுசு மிகவும் குறைந்துவிட்டதாக புள்ளிவிவர தரவுகள் தெரிவிக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால், 2020-இன் முதல் ஆறு மாதங்கள், 2012-க்குப் பிறகு ஐபிஓ சந்தைக்கு மோசமான காலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த காலண்டர் ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 17 நிறுவனங்கள் முதல் நிலைச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் எஸ்பிஐ கார்ட்ஸ் அண்ட் பேமெண்ட் சர்வீஸஸ் ஒன்றுதான் பெரிய நிறுவனமாகும். எஞ்சியுள்ள 16 நிறுவனங்களும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பட்டியலில் வருகின்றன. இவற்றில் எஸ்பிஐ கார்ட்ஸ் உள்பட 8 நிறுவனங்கள் தற்போது ஐபிஓ விலையை விட கீழே வர்த்தகமாகி வருகிறது.கடந்த ஆண்டு இதே காலத்தில் 35 நிறுவனங்கள் முதல் நிலைச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதில் 7 நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாகும்.
எஸ்பிஐ கார்ட்ஸ் அறிமுகத்துக்குப் பிறகு ஐபிஓக்களைத் தொடங்க பல நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால், கரோனா பரவல் அந்த உணர்வுக்குத் தடையாக அமைந்துவிட்டது. கரோனாவைத் தொடர்ந்து உலக அளவில் அமலுக்கு வந்த பொது முடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் தாக்கம் காரணமாக, இந்தியா உள்பட உலகளாவிய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய குறியீடுகள் ஜனவரியில் பதிவு செய்த தங்களது உச்சபட்ச அளவிலிருந்து தலா 40 சதவீதத்தை இழந்தது.
மேலும், கரோனா தொற்று பரவல் உலக அளவில் பணப்புழக்கத்தை பெருமளவு குறைத்துவிட்டது. இதனால், எஸ்பிஐ கார்ட்ஸ் பட்டியலான பிறகு முதல் நிலைச் சந்தை பாலைவனம் போல ஆகிவிட்டது. இதனால், முதல் நிலைச் சந்தைக்கென உள்ள முதலீட்டாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கரோனா பாதிப்பு பொருளாதார நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. மேலும், பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. நிதிச் சந்தையில் நிச்சயமற்ற தன்மையும், அச்சமும் தொற்றிக் கொண்டுள்ளது. இது போன்ற காரணங்கள் முதல் நிலைச் சந்தைக்கு பெரும் பாதகமாக அமைந்துவிட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஐபிஓ வெளியிடும் நிறுவனங்களின் புரமோட்டர்கள் பின்வாங்கியது, பலவீனமான இரண்டாம் நிலைச் சந்தை உணர்வு மற்றும் சந்தை சார்ந்த கவலைகள் உள்ளிட்டவை முதல்நிலைச் சந்தை முதலீட்டாளரின் உணர்வுகளைக் கடுமையாகப் பாதித்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பிப்ரவரி-மார்ச்சில் ஏற்பட்ட சந்தை வீழ்ச்சிக்குப் பின்னர், அரசு பொருளாதாரத்தைத் திறக்கத் தொடங்கியதும், பொது முடக்கத்தை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தியதும் சந்தை மேல் நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. ஆனால், ஐபிஓ சந்தை இன்னும் புத்துயிர் பெறாமல் உள்ளது. இந்நிலையில், சந்தை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலாவது முதல்நிலைச் சந்தை புத்துயிர் பெறக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, தற்போது ஏற்ற, இறக்க நிலைகள் குறைந்து முக்கியக் குறியீடுகள் மீண்டும் ஏறுமுகம் காண்பதால், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொழில்நுட்பம், மருந்து, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஐபிஓ செயல்பாடு தொடங்கக்கூடும் என்று கேபிடல் வியா குளோபல் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
"தற்போதைய சூழ்நிலையில், முதல் நிலைச் சந்தை உத்வேகம் பெறுவது கடினம்தான். முதல்நிலைச் சந்தைக்கு பங்கேற்பாளர்களின் ஆதரவு கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது' என்று மார்க்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஒருவேளை பொருளாதார நடவடிக்கைகளில் நிலையான தன்மை ஏற்படும் பட்சத்தில் சந்தை ஊக்கம் பெறக்கூடும். அப்போது பெரிய நிறுவனங்கள் ஒன்றோ, இரண்டோ முதல் நிலைச் சந்தையில் நுழைவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் யுடிஐ ஏஎம்சி மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கு வாய்ப்புள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
உலகளாவிய அளவில் அனைத்துத் தரப்பினரையும் புரட்டிப் போட்டுள்ள கண்ணுக்குத் தெரியாத "கரோனா', முதல் நிலைச் சந்தையையும் விட்டு வைக்கவில்லை. இச்சூழ்நிலையில் இந்த ஆண்டில் மீதமுள்ள மாதங்களிலாவது முதல் நிலைச் சந்தை புத்துயிர் பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் உள்ளனர் என்பதே உண்மை...!
-எம்.சடகோபன்