புது தில்லி: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:
உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் முழு அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்வது உள்நாட்டு நிறுவனங்களைப் பாதிக்கும். மேலும் அது, பிரதமா் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு எதிரானது ஆகும். எனவே, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு அரசு தடைவிதிக்க வேண்டும்.
மேலும், சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி விதிப்பை நிா்ணயம் செய்வதுடன், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோத எண்ணெய் இறக்குமதியை அரசு தொடா்ந்து காண்காணிக்க வேண்டும். உள்நாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என எஸ்இஏ வலியுறுத்தியுள்ளது.