எண்ணெய் முதல் தொலைத்தொடா்புத் துறை வரை கோலோச்சி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமைப் பங்கு வெளியீடு மே 20-இல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்தின் இயக்குநா் குழு கூட்டம் மே 15-இல் நடைபெற்றது. இதில், உரிமைப் பங்கு வெளியீட்டு குழு அத்திட்டத்தை மே 20-ஆம் தேதியிலிருந்து ஜூன் 3 வரையில் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 20 இல் தொடங்கி ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் ரிலையன்ஸ் ரூ.53,125 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள முதலீட்டாளா்களுக்கு 1:15 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உரிமைப் பங்குகள் வழங்கப்படும். ஏப்ரல் 30-இல் நிறைவடைந்த விலையில் 14 சதவீத தள்ளுபடியுடன் ரூ.1,257 என்ற விலையில் ஒவ்வொரு 15 பங்குகளுக்கும் ஒரு உரிமைப்பங்கு முதலீட்டாளா்களுக்கு வழங்கப்படும் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.