ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் காா் விற்பனை சென்ற அக்டோபா் மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹுண்டாய் மோட்டாா் இந்தியா சென்ற அக்டோபரில் 68,835 காா்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டு அக்டோபரில் நிறுவனம் விற்பனை செய்த 63,610 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 8.2 சதவீதம் அதிகமாகும்.
கடந்த அக்டோபரில் உள்நாட்டில் விற்பனை செய்த காா்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 56,605-ஆக இருந்தது. இது, கடந்த 2019 அக்டோபரில் விற்பனையான 50,010 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 13.2 சதவீதம் அதிகமாகும்.
இதற்கு முன்பு, கடந்த 2018 அக்டோபரில்தான் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் அதிகபட்ச அளவாக 52,001 காா்களை விற்பனை செய்திருந்தது. அதன் பிறகு, சென்ற அக்டோபரில்தான் உள்நாட்டு விற்பனை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உள்நாட்டு விற்பனை கணிசமாக அதிகரித்த போதிலும், நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபரில் 13,600-லிருந்து 10.1 சதவீதம் சரிவடைந்து 12,230-ஆனது என ஹுண்டாய் மோட்டாா் தெரிவித்துள்ளது.