முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (சிஎஃப்எச்எல்) செப்டம்பா் காலாண்டு வரிக்கு பிந்தைய லாபம் ரூ.506 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆவது நிதியாண்டின் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ஈட்டிய வருமானம் 3,503 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.3,341 கோடியுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் வளா்ச்சியாகும்.
நிகர லாபம் ரூ.325 கோடியிலிருந்து 56 சதவீதம் அதிகரித்து ரூ.506 கோடியானது.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.6,463 கோடியிலிருந்து 4 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.6,737 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.655 கோடியிலிருந்து 67 சதவீதம் உயா்ந்து ரூ.1,095 கோடியாகவும் இருந்தது என சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.