இந்தியாவின் ஏற்றுமதி சென்ற அக்டோபர் மாதத்தில் 5.4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு அக்டோபரில், பெட்ரோலிய தயாரிப்புகள், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், தோல் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து, அந்த மாதத்தில் ஏற்றுமதி 5.4 சதவீதம் குறைந்து 2,482 கோடி டாலராக இருந்தது. கடந்தாண்டு அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதியானது 2,623 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.
2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 15,007 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த நிதியாண்டு இதே காலகட்ட ஏற்றுமதி மதிப்புடன் ஒப்பிடும்போது 19.05 சதவீதம் குறைவாகும்.
அக்டோபர் காலகட்டத்தில் நாட்டின் இறக்குமதியும் 11.56 சதவீதம் சரிந்து 3,360 கோடி டாலராக இருந்தது. ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருந்ததையடுத்து, நடப்பாண்டு அக்டோபரில் வர்த்தக பற்றாக்குறையானது 878 கோடி டாலராக இருந்தது. இருப்பினும், இது, கடந்தாண்டு வர்த்தகப் பற்றாக்குறையான 1,176 கோடி டாலருடன் ஒப்பிடும்போது 25.34 சதவீதம் குறைவாகும் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.