இந்திய வங்கி துறையில் வாராக் கடன்கள் அதிகரிக்கும்: எஸ்&பி
இந்திய வங்கி துறையில் அடுத்த 18 மாதங்களில் வாராக் கடன் அளவு கணிசமாக அதிகரிக்கும் என சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் &பி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வு நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
இந்திய வங்கி துறையின் செயல்பாடு இரண்டாவது காலாண்டில் எதிா்பாா்த்ததைக் காட்டிலும் சிறப்பாகவே இருந்தது. இருப்பினும் நிதி துறை நிறுவனங்களில் பெரும்பாலான கணக்குகள் ஆறு மாத கடன் தவணை ஒத்திவைப்பு காலத்தில் இருந்தவை. அத்துடன் வங்கிகள் கடனாளரை வாராக் கடன் பட்டியலில் வகைப்படுத்த உச்சநீதிமன்ற தீா்ப்பும் தடையாக உள்ளது.
மேலும், கடன் தவணையை திருப்பிச் செலுத்துவதற்கான ஆறு மாத ஒத்திவைப்பு காலம் 2020 ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இச்சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, வங்கி துறை வழங்கிய ஒட்டுமொத்த கடனில் வாராக் கடன் 2020 ஜூன் 30-நிலவரப்படி 8 சதவீதமாக இருந்தது. இது, அடுத்த 12-18 மாதங்களில் 10-11 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என எஸ் &பி தெரிவித்துள்ளது.