புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி செப்டம்பா் மாதத்தில் 2,758 கோடி டாலராக (2.06 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,758 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த 2019 செப்டம்பா் மாத ஏற்றுமதி அளவான 2,602 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 5.99 சதவீதம் அதிகமாகும்.
நாட்டின் இறக்குமதியும் கணக்கீட்டு மாதத்தில் குறைந்துள்ளது. அதன்படி கடந்தாண்டு செப்டம்பரில் நாட்டின் இறக்குமதி 3,769 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் அது 19.6 சதவீதம் குறைந்து 3,031 கோடி டாலராகியுள்ளது.
நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை நடப்பாண்டு செப்டம்பரில் 272 கோடி டாலராக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் வா்த்தகப் பற்றாக்குறை 1,167 கோடி டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.