எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச் சந்தை! முதலீட்டாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் கோடி நஷ்டம்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை, எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது
எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச் சந்தை! முதலீட்டாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் கோடி நஷ்டம்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை, எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதனால்,  மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  51.88 புள்ளிகளை இழந்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.1.19 லட்சம் கோடி நஷ்டத்தைச் சந்தித்தனர்.
காலையில் பங்குச் சந்தை  எழுச்சியுடன் தொடங்கி நேர்மறையாக இருந்து வந்தது. பிற்பகலில் ஐரோப்பிய சந்தைகள் பலவீனமாகத் தொடங்கியதும், வர்த்தக நேர முடிவில் ஏராளமான பங்குகள் விற்பனைக்கு வந்தன. இதனால், காலையில் பெற்ற லாபம் அனைத்தையும் இழக்க நேரிட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும்,  மார்க்கெட் லீடர் ரிலையனஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை வெகுவாக உயர்ந்து பெரும் சரிவைத் தவிர்க்க உதவின என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,719 பங்குகள் வீழ்ச்சி
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,866 பங்குகளில் 976 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,719 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 171 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 112 பங்குகள் 52 வார அதிக விலையையும் 49  பங்குகள் 52 வார குறைந்த விலையையும்  பதிவு செய்துள்ளன. 255 பங்குகள் வெகுவாக உயர்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 225 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு 1.19 லட்சம் கோடி குறைந்து ரூ.153.55 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 5,40,81,271-ஆக உயர்ந்துள்ளது.
திடீர் சரிவு
சென்செக்ஸ் காலையில் 80.84 புள்ளிகள் உயர்ந்து 38,498.07-இல் தொடங்கி 38,746.48 வரை உயர்ந்தது. பின்னர், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 38,275.45 வரை கீழே சென்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் உச்சத்தில் இருந்து  471.03 புள்ளிகள் சரிவைச் சந்தித்திருந்தது. இறுதியில் 51.88 புள்ளிகள் (0.14 சதவீதம்)  குறைந்து 38,365.35-இல் நிலைபெற்றது. காலையிலிருந்து நேர்மறையாக இருந்து வந்த சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் திடீரென சரிவைச் சந்தித்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.49 சதவீதம்,  ஸ்மால் கேப் குறியீடு 0.93 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 37.70 புள்ளிகள் (0.33 சதவீதம்) குறைந்து 11,317.35-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 11,437.25 வரை உயர்ந்த நிஃப்டி, பின்னர் 146.80 புள்ளிகளை இழந்து 11,290.45 வரை கீழே சென்றது.
ஹெச்சிஎல் டெக் முன்னிலை
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் ஹெச்சிஎல் டெக் 2.22 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், டெக் மகேந்திரா ஆகியவை 0.75 சதவீதம் முதல் 1.70 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸýகி, பஜாஜ் ஆட்டோ சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன.
டாடா ஸ்டீல் வீழ்ச்சி
அதே சமயம், கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த டாடா ஸ்டீல் 4.13 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ஓஎன்ஜிசி, சன்பார்மா, என்டிபிசி ஆகியவை 2 முதல் 3.40 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், எஸ்பிஐ, எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி, ஹெச்யுஎல், கோட்டக் பேங்க், ஐடிசி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...
தேசிய பங்குச் சந்தையில் 465 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,148 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி ஐடி குறியீடு 1.20 சதவீதம் ஏற்றம் பெற்றது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மீடியா, மெட்டல் குறியீடுகள் 3 சதவீதம், பிஎஸ்யு பேங்க், பார்மா குறியீடுகள் 1.60 சதவீதம் சரிந்தன.   நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 37 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com