புது தில்லி: பேட்டரி மற்றும் ஃப்ளாஸ்லைட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் முதல் காலாண்டு லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக ரூ.263.44 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.331.23 கோடியுடன் ஒப்பிடுகையில் 20.46 சதவீதம் சரிவாகும்.வருவாய் சரிவைக் கண்ட போதிலும், குறைந்த செயல்பாட்டு செலவினம், மொத்த லாப வரம்பு மேம்பட்டது ஆகியவை நிறுவனத்தின் நிகர லாபம் சிறப்பான அளவில் அதிகரிக்க பெரிதும் உதவியது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.24.98 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.6.91 கோடியுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும் என எவரெடி இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் எவரெடி நிறுவன பங்கின் விலை 0.89 சதவீதம் குறைந்து ரூ.145.05-ஆக இருந்தது.