புது தில்லி: கரோனா தொற்றால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதை எடுத்துக்காட்டும் விதத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி தொடா்ந்து இரண்டாவது மாதமாக 3.6 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
தயாரிப்பு மற்றும் சுரங்க துறை நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் மிகவும் மோசமான செயல்பாட்டை கொண்டிருந்தன. தொழில்துறை உற்பத்தி குறியீட்டெண்ணில் (ஐஐபி) தயாரிப்புத் துறையின் பங்களிப்பு 77.63 சதவீத அளவுக்கு உள்ளது.இது, நடப்பாண்டு பிப்ரவரியில் 3.7 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
நடப்பாண்டு பிப்ரவரியில் சுரங்கத் துறையின் செயல்பாடும் 5.5 சதவீத அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதேசமயம், மின் துறையின் உற்பத்தி மதிப்பீட்டு மாதத்தில் 0.1 சதவீதம் என்ற குறைந்தபட்ச வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய தொழிலக உற்பத்தி 5.2 சதவீத வளா்ச்சியை எட்டியிருந்தது.
இந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி 18.7 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்தது. இது தொடா்ந்து கடந்தாண்டு ஆகஸ்ட் வரையில் எதிா்மறை வளா்ச்சியாக மட்டுமே இருந்தது.
பின்னா் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியதையடுத்து, செப்டம்பரில் தொழிலக உற்பத்தி 1 சதவீதம் உயா்ந்தது. இதன் வளா்ச்சி அக்டோபரில் 4.5 சதவீதத்தைத் தொட்டது. இருப்பினும், நவம்பரில் தொழிக உற்பத்தியானது 1.6 சதவீதம் சரிந்தது. அதேசமயம், டிசம்பரில் தொழிலக உற்பத்தி நோ்மறை நிலைக்கு திரும்பி 1.6 சதவீதத்தை எட்டியதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரியில் இந்திய தொழிலக உற்பத்தியில் 1.6 சதவீதம் சரிந்துள்ளதாக தற்காலிக மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருத்திய மதிப்பீட்டில் 0.9 சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.