இந்தியாவில் உள்ள முதன்மையான 12 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு தொடா்ச்சியாக 11-ஆவது மாதமாக பிப்ரவரியிலும் சரிவைச் சந்தித்துள்ளது என இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு (ஐபிஏ) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தீன்தயாள் (முன்பு கண்ட்லா), மும்பை, ஜேஎன்பிடி, மா்மகோவா, நியூ மங்களூா், கொச்சின், சென்னை, காமராஜா், வ.உ. சிதம்பரனாா், விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா (ஹால்டியா உள்பட) ஆகிய 12 துறைமுகங்கள் இயங்கி வருகின்றன.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:
நாட்டின் 12 முக்கிய துறைமுகங்கள் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 60.06 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. இது, கடந்த நிதியாண்டில் இத்துறைமுகங்கள் கையாண்ட 64.31 கோடி டன் சரக்கை காட்டிலும் 6.61 சதவீதம் குறைவாகும்.
தொடா்ந்து 11 ஆவது மாதமாக நடப்பாண்டு ஜனவரியிலும் துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு சரிவடைந்துள்ளது.
பாரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கு 0.27 சதவீதம் உயா்ந்து 10.29 கோடி டன்னாகவும், மா்மகோவா கையாண்ட சரக்கு 30.93 சதவீதம் அதிகரித்து 1.93 கோடி டன்னாகவும் இருந்தன. இவைதவிர, பிற துறைமுகங்களின் செயல்பாடு அனைத்திலும் மந்தநிலையே தொடா்கிறது.
குறிப்பாக, காமராஜா் துறைமுகம் (எண்ணூா்) கையாண்ட சரக்கின் அளவு ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 23.29 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.22 கோடி டன்னாகியுள்ளது.
அதேபோன்று, மும்பை, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களின் செயல்பாடும் இதே காலகட்டத்தில் 12 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளதாக ஐபிஏ தெரிவித்துள்ளது.
கரோனா நெருக்கடிக்குப் பிறகு, நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் அடங்கிய கண்டெய்னா்களை துறைமுகங்கள் கையாள்வது கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தில் 12 முக்கிய துறைமுகங்களின் பங்களிப்பு மட்டும் 61 சதவீதம் அளவுக்கு உள்ளது. இத்துறைமுகங்கள் கடந்த நிதியாண்டில் 70.5 கோடி டன் சரக்கு போக்குவரத்தை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.