சுந்தரம் ஃபைனான்ஸ் (எஸ்எஃப்) ஹோல்டிங்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 193.3 சதவீத நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனம் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.11.09 கோடியை ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.3.78 கோடியுடன் ஒப்பிடும்போது 193.3 சதவீதம் அதிகமாகும்.
செப்டம்பருடன் நிறைவடைந்த 6 மாத காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.9.41 கோடியிலிருந்து ரூ.50.86 கோடியாக அதிகரித்துள்ளது.
பிரேக்ஸ் இந்தியா மற்றும் வீல்ஸ் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு மூலதனத்தை வாங்கும் வகையில் கடந்த ஆண்டில் ரூ.450 கோடி முதலீடு செய்யப்பட்டதாக எஸ்எஃப் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.