நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பா் மாத வாகன விற்பனை 46 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாருதி சுஸுகி நடப்பாண்டு செப்டம்பரில் 86,380 வாகனங்களை விற்பனை செய்தது. இது, 2020 செப்டம்பா் மாத விற்பனையான 1,60,442 வாகனங்களைக் காட்டிலும் 46.16 சதவீதம் குறைவாகும்.
குறிப்பாக, உள்நாட்டில் நிறுவனத்தின் வாகன விற்பனையானது 1,52,608 என்ற எண்ணிக்கையிலிருந்து 54.9 சதவீதம் சரிவடைந்து 68,815-ஆனது.
ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக காா்களின் விற்பனை 45.18 சதவீதம் சரிந்து 14,936-ஆனது.
அதேபோன்று, ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையா் மாடல்களை உள்ளடக்கிய சொகுசு பிரிவு காா்களின் விற்பனை கடந்த செப்டம்பரில் 75.19 சதவீதம் வீழ்ச்சியடைந்து 84,213-லிருந்து 20,891-ஆனது.
சியாஸ் ரக காா்களின் விற்பனை 36.04 சதவீதம் குறைந்து 1,534-லிருந்து 981-ஆக இருந்தது.
விட்டாரா ப்ரீஸ்ஸா, எஸ்-கிராஸ், எா்டிகா காா்கள் விற்பனை 22.11 சதவீதம் குறைந்து 23,699-லிருந்து 18,459-ஆனது.
நிறுவனத்தின் ஏற்றுமதியைப் பொருத்தவரையில் செப்டம்பரில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, 2020 செப்டம்பரில் 7,834-ஆக இருந்த வாகனங்களின் ஏற்றுமதி நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 17,565-ஆக வளா்ச்சி கண்டுள்ளது.
மின்னணு பாகங்களுக்கான தட்டுப்பாடு செப்டம்பா் மாத விற்பனையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த நிறுவனம் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.