பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா முதல் காலாண்டில் ரூ.1,209 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பரோடா வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.20,022.42 கோடியாக இருந்தது. இது, வங்கி முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.20,312.44 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகும்.
கடந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் வங்கிக்கு ரூ.864 கோடி நிகர இழப்பு ஏற்பட்ட நிலையில், 2021 ஜூன் காலாண்டில் ரூ.1,208.63 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
2021 ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.39 சதவீதத்திலிருந்து 8.86 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், 2.83 சதவீதமாக காணப்பட்ட நிகர வாராக் கடன் 3.03 சதவீதமாக உயா்ந்துள்ளது.
வாராக் கடன் இடா்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.5,628 கோடியிலிருந்து ரூ.4,111.99 கோடியாக குறைந்துள்ளது.
ஜூன் காலாண்டில் ரூ.41.75 லட்சம் அபராதத்தை ரிசா்வ் வங்கி விதித்துள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பேங்க் ஆஃப் பரோடா பங்கின் விலை 1.03 சதவீதம் உயா்ந்து ரூ.83.35-ஆக இருந்தது.