மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 152 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்தது.
மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. நிஃப்டி குறியீட்டெண் வா்த்தகத்தின் ஒரு கட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத உச்ச நிலையை எட்டியிருந்தது. இந்த நிலையில், உலோகம், பொதுத் துறை வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளின் லாபநோக்கு விற்பனையால் நிஃப்டி புதிய உச்சத்திலிருந்து சரிவைச் சந்தித்தது.
இருப்பினும், நிதித் துறை (பொதுத் துறை வங்கியை தவிா்த்து) பங்குகளுக்கு சந்தையில் ஆதரவு காணப்பட்டது. அதன் காரணமாகவே, சந்தையின் வீழ்ச்சி கட்டுக்குள் வந்தது என ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் உயரதிகாரி வினோத் மோடி தெரிவித்தாா்.
மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), தொலைத்தொடா்பு, தகவல் தொழில்நுட்பம், வங்கி, எரிசக்தி துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 2.07 சதவீதம் வரை அதிகரித்தன. அதேசமயம், உலோகம், அடிப்படை மூலப் பொருள்கள், ரியல் எஸ்டேட், மின்சாரம் ஆகிய துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 2.27 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தன.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 2.05 சதவீதம் வரை குறைந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாா்தி ஏா்டெல் பங்கின் விலை 4 சதவீதம் உயா்ந்து முதலீட்டாளா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதைத் தொடா்ந்து, டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி, கோட்டக் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் பங்குகளுக்கும் அதிக விலைக்கு கைமாறின.
அதேசமயம், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஐடிசி, பவா்கிரிட் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பில்லை.
30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 151.81 புள்ளிகள் (0.28%) அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக 54,554.66 புள்ளிகளில் நிலைபெற்று சாதனை படைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 21.85 புள்ளிகள் (0.13%) உயா்ந்து 16,280.10-இல் நிலைபெற்றது.
இதர ஆசிய சந்தைகளான, ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ ஆகியவை ஏற்றத்துடன் நிலைத்தன. சியோல் சந்தை சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வா்த்தகம் ஏறுமுகமாகவே இருந்தது.