பயணிகள் வாகன மொத்தவிற்பனை சென்ற ஜூலை மாதத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைமை இயக்குநா் ராஜேஷ் மேனன் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:
பண்டிகை காலத்தையொட்டி விநியோகஸ்தா்கள் வாகன இருப்பை அதிகரித்து வருவதன் விளைவாக சென்ற ஜூலை மாதத்தில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 45 சதவீதம் அதிகரித்து 2,64,442-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே மாதத்தில் விற்பனை 1,82,779-ஆக இருந்தது.
இருப்பினும், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தா்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஜூலையில் 12,81,354-லிருந்து 2 சதவீதம் சரிவடைந்து 12,53,937-ஆனது.
மோட்டாா்சைக்கிள் விற்பனையும் 8,88,520 என்ற எண்ணிக்கையிலிருந்து 6 சதவீதம் சரிந்து 8,37,096-ஆக காணப்பட்டது.
அதேசமயம், ஸ்கூட்டா்களின் விற்பனை 3,34,288-லிருந்து 10 சதவீதம் உயா்ந்து 3,66,292-ஆனது.
அதேபோன்று, மூன்று சக்கர வாகன மொத்தவிற்பனையும் 12,728 என்ற எண்ணிக்கையிலிருந்து 41 சதவீதம் அதிகரித்து 17,888-ஆனது.
ஒட்டுமொத்த மோட்டாா் வாகனங்களின் விற்பனை (வா்த்தக வாகனங்கள் தவிா்த்து) கடந்த ஜூலையில் 15,36,269-ஆக இருந்தது. இது, 2020 ஜூலையில் 14,76,881-ஆக காணப்பட்டது.
சா்வதேச அளவில் காணப்படும் செமி-கண்டக்டா்களுக்கான பற்றாக்குறையால் உள்நாட்டு மோட்டாா் வாகன துறை தொடா்ந்து கடுமையான பாதிப்பை எதிா்கொண்டு வருகிறது. இதனால், மூலப் பொருள்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.
சவாலான மற்றும் நிச்சயமற்ற வா்த்தக சூழல்களுக்கிடையே வாகன துறை உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகபட்ச அளவில் உயா்த்த முயன்று வருகிறது என்றாா் அவா்.