புது தில்லி: இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் (பி-நோட்ஸ்) வாயிலான முதலீடு கடந்த நவம்பா் மாதத்தில் ரூ.94,826 கோடியாக இருந்தது என செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
நேரடியாக பதிவு செய்யாமல் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு, பதிவுபெற்ற அந்நிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் பங்கேற்பு ஆவணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இந்த ஆவணங்கள் மூலமாக கடந்த நவம்பா் மாதத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.94,826 கோடியை முதலீடு செய்துள்ளனா். அக்டோபா் இறுதியில் இந்த முதலீடானது ரூ.1,02,553 கோடியாக காணப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகு (ரூ.1,06,403 கோடி) நடப்பாண்டு அக்டோபரில்தான் அதிபட்ச முதலீடு மேற்கொள்ளப்பட்டது.
பங்கேற்பு ஆவண முதலீடு நடப்பாண்டு செப்டம்பரில் ரூ.97,751 கோடியாகவும், ஆகஸ்ட் இறுதியில் ரூ.97,744 கோடியாகவும் இருந்தன. ஜூலையில் இந்த முதலீடு முந்தைய மதிப்பீடான ரூ.1,01,798 கோடியிலிருந்து ரூ.85,799 கோடியாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி-நோட்ஸ் முதலீடு ஜூன் இறுதியில் ரூ.92,261 கோடியாகவும், மே மாதத்தில் ரூ.89,743 கோடியாகவும், ஏப்ரலில் ரூ.88,447 கோடியாகவும், மாா்ச் இறுதியில் ரூ.89,100 கோடியாகவும் இருந்தன.
நடப்பாண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ரூ.94,826 கோடி பங்கேற்பு ஆவண முதலீட்டில், ரூ.84,915 கோடி பங்குகளிலும், ரூ.9,605 கோடி கடன் சந்தையிலும், ரூ.306 கோடி ஹைபிரிட் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்ப்பட்டன.
சா்வதேச சந்தை நிலவரங்களையொட்டி கடந்த நான்கு மாதங்களாகவே இவ்வகையான முதலீட்டில் அதிக ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டு வருகின்றன.
அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் வசம் உள்ள சொத்துகளின் மதிப்பு அக்டோபா் இறுதியில் ரூ.53.6 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நவம்பா் இறுதியில் ரூ.52.24 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.