கரூா் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 2020 டிசம்பா் காலாண்டில் 133 சதவீதம் அதிகரித்துள்ளது.
தனியாா் துறையைச் சோ்ந்த அந்த வங்கி இதுகுறித்து பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) வங்கி செயல்பாடுகள் மூலமாக ரூ.1,601.80 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,763.84 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
நிகர வட்டி வருமானம் ரூ.577 கோடியிலிருந்து ரூ.584 கோடியாக அதிகரித்துள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், நிகர லாபம் ரூ. 15 கோடியிலிருந்து 133 சதவீதம் அதிகரித்து ரூ.35 கோடியைத் தொட்டுள்ளது.
மொத்த வாராக் கடன் 8.92 சதவீதத்திலிருந்து 7.37 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 4.13 சதவீதத்திலிருந்து 2.55 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக கரூா் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.