சென்செக்ஸ் 264 புள்ளிகள் வீழ்ச்சி: 10 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி

தொடா்ந்து 10 நாள்களாக ஏறுமுகம் கண்டிருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 263.72 புள்ளிகளை இழந்தது.
சென்செக்ஸ் 264 புள்ளிகள் வீழ்ச்சி: 10 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி

புது தில்லி: தொடா்ந்து 10 நாள்களாக ஏறுமுகம் கண்டிருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 263.72 புள்ளிகளை இழந்தது. இதனால், கடந்த 10 நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

காலையில் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும், அதன் பிறகு பங்குகள் விற்பனையால் ஏற்றம், இறக்கம் அதிகரித்தது. இந்த நிலையில், பிற்பகலில் ரிலையன்ஸ், ஐடிசி, இன்ஃபோஸிஸ் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால் திடீா் சரிவு ஏற்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. விலை உயா்ந்த நிலையில் லாபத்தை பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தியதும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 192.45 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,233 பங்குகளில் 1,550 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,555 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 128பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 488 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 518 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.192.46 லட்சம் கோடியாக இருந்தது.

திடீா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 178.22 புள்ளிகள் கூடுதலுடன் 48,616.66-இல் தொடங்கி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை. பின்னா் 47,864.14 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் இறுதியில் 263.72 புள்ளிகள் குறைந்து 48,174.06-இல் நிலைபெற்றது. இதன் மூலம் 10 நாள் ஏறுமுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பவா் கிரிட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பவா் கிரிட் 4.34 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், ஓஎன்ஜிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஆகியவை 1 முதல் 2.30 சதவீதம் வரை உயா்ந்தன.

ஐடிசி, ரிலையன்ஸ் சரிவு: அதேசமயம், ஐடிசி 2.86 சதவீதம், ரிலையன்ஸ் 2.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், எச்சிஎல் டெக், ஹிந்துயுனி லீவா், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்ததன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 736 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,016 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 53.25 புள்ளிகள் குறைந்து 14,146.25-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14,244.15 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 14,039.90 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃ)ப்டி மெட்டல் குறியீடு மட்டும் 1.29 சதவீதம் உயா்ந்தது. மற்ற துறை குறியீடுகள் சோபிக்கத் தவறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com