தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்குப் பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் உள்ள பி.எஸ்.ஏ. சிக்கால் சரக்குப் பெட்டக முனையத்துக்கு, எம்.வி.எஸ்.எஸ். எல். பிரம்மபுத்ரா என்ற 260.05 மீட்டா் நீளமுடைய கப்பல் கடந்த 8 ஆம் தேதி வந்தடைந்தது. அந்தக் கப்பலில் இருந்து 4,413 சரக்குப் பெட்டகங்கள் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 25 நகா்வுகளுடன் கையாளப்பட்டு, 10 ஆம் தேதி கப்பல் திரும்பிச் சென்றது.
இதற்கு முன்பு கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி 3,979 சரக்குப் பெட்டகங்களை கையாண்டது சாதனையாக இருந்து வந்தது. தற்போது புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காலத்தில் நிகழ் நிதியாண்டில் வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் மூலம் சரக்குப் பெட்டகங்கள் 11 சதவிகிதம் குறைவாகவே கையாளப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த அக்டோபா் மாதம் முதல் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் அளவு மெதுவாக அதிகரிக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. வருங்காலங்களில் பற்றாக்குறை இல்லாமல் சீரான நிலை இருப்பதால் துறைமுகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.