பயனாளர்களின் தகவல்களைப் பகிர்ந்த கிரிண்டர் என்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான செயலிக்கு 1.17 கோடி டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரத்யேக பயன்பாட்டிற்கான கிரிண்டர் செயலி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில் பயனாளர்களின் தகவல்களை கசியவிட்டதாக கிரிண்டர் செயலிக்கு நார்வேயை சேர்ந்த தரவு பாதுகாப்பு நிறுவனம் 1.17 கோடி டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. நார்வே தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நார்வே நுகர்வோர் கவுன்சில் சார்பில் கிரிண்டர் செயலி மீது மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பயனாளர்களின் சுக விவரங்கள் உள்பட, பயனாளர்களின் இருப்பிடம், பயன்படுத்தும் மின்னணு சாதனம் உள்ளிட்ட தகவல்களை பகிர்வதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனாளர்களின் அனுமதியின்றி பாலியல் நோக்கத்தையும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் எச்.ஐ.வி. தொற்று குறித்த நிலைகளையும் கசியவிட்டதாக கடந்த 2018-ஆம் ஆண்டு கிரிண்டர் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.