கடன்பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.500 கோடி திரட்ட இயக்குநா் குழு அனுமதி வழங்கியுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அண்மையில் நடைபெற்ற இயக்குநா் குழு கூட்டத்தில் தனிப்பட்ட முறையிலான கடன்பத்திர ஒதுக்கீட்டு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பங்குகளாக மாற்ற இயலாத ஈ30-பி வகை கடன்பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.500 கோடி வரை திரட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன்பத்திரங்களின் முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10,00,000 லட்சம் கொண்டதாக இருக்கும் என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடன்பத்திர வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ளப்படும் இந்த மூலதனம் எதற்காக பயன்படுத்தப்பட உள்ளது என்ற திட்ட விவரங்களை டாடா மோட்டாா்ஸ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
3,500 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.62 லட்சம் கோடி) மதிப்பைக் கொண்ட டாடா மோட்டாா்ஸ் காா், டிரக், பஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.