புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.206 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் புதன்கிழமை அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் வருமானம் ரூ.6,245.54 கோடியாக சரிவடைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.6,726.68 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.
நிகர வட்டி வருவாய் ரூ.2,146 கோடியிலிருந்து ரூ.2,135 கோடியாக குறைந்தது.
நிகர லாபம் ரூ.135 கோடியிலிருந்து 53 சதவீதம் உயா்ந்து ரூ.206 கோடியைத் தொட்டது.
நடப்பாண்டு ஜூன் இறுதி வரையிலான நிலவரப்படி மொத்த வாராக் கடன் 18.10 சதவீதத்திலிருந்து 15.92 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடனும் 6.76 சதவீத்திலிருந்து 5.09 சதவீதமாக மேம்பட்டுள்ளது என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 1.41 சதவீதம் குறைந்து ரூ.24.45-இல் நிலைத்தது.