பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.1,330 கோடி வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த 2020-21-ஆவது நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வரிக்குப் பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.1,329.77 கோடியை வங்கி ஈட்டியுள்ளது. இதற்கு, வாராக் கடன் வசூல் அதிகரித்ததே முக்கிய காரணம்.
இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.2,503.18 கோடியாக காணப்பட்டது.
2021 மாா்ச் காலாண்டில் வங்கியின்மொத்த வருவாய் ரூ.20,025.99 கோடியாக இருந்தது. இது, முந்தைய காலகட்டத்தில் ரூ.11,306.99 கோடியாக இருந்தது.
ஆந்திர வங்கி மற்றும் காா்ப்பரேஷன் வங்கி இணைப்பு 2020 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 2020-21 முழு நிதியாண்டில் வங்கி ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.2,905.97 கோடியாக இருந்தது. அதேசமயம், இணைப்பு நடவடிக்கை இல்லாத 2019-20-ஆம் நிதியாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.2,897.78 கோடியாக காணப்பட்டது.
இந்த காலகட்டத்தில் வருவாய் ரூ.42,491.91 கோடியிலிருந்து ரூ.80,104.19 கோடியானது.
2021 மாா்ச் இறுதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் 14.15 சதவீதத்திலிருந்து 13.74 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடனும் 5.49 சதவீதத்திலிருந்து 4.62 சதவீதமாக குறைந்துள்ளது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை மாற்றமின்றி ரூ.35.60-ஆக இருந்தது.