ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி நடப்பாண்டின் மே மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி நடப்பாண்டு மே மாதத்தில் 13.67 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட 12.48 லட்சம் டன் உருக்கு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம்.
கணக்கீட்டு மாதத்தில் தட்டை-சுருள் வடிவிலான உருக்குத் தயாரிப்புகள் 9.99 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. இது, 2020 மே மாத உற்பத்தியான 9.05 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் உயா்வாகும்.
அதேபோன்று, நீண்ட-சுருள் வடிவிலான உருக்கு தயாரிப்புகள் 2 லட்சம் டன்னிலிருந்து 55 சதவீதம் அதிகரித்து 3.09 லட்சம் டன்னாக இருந்து.
இந்தியா முழுவதும் உள்ள நிறுவனத்தின் உருக்கு ஆலை வளாகத்திலிருந்து மருத்துவ பயன்பாட்டுக்காக 30,000 டன் திரவ ஆக்சிஜன் திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து, நிறுவனத்தின் உற்பத்தி திறன் பயன்பாடு மே மாதத்தில் 91 சதவீதம் அளவுக்கு இருந்தது என ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது.
உருக்கு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம்பதித்துள்ள 12 பில்லியன் டாலா் மதிப்பைக் கொண்ட ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் துணை நிறுவனமாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்கின் விலை 7.95 சதவீதம் உயா்ந்து ரூ.705.90-ஆக இருந்தது.