அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து 6-வது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
கடந்த சில வாரங்களாகவே சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், எண்ணெய் இறக்குமதியாளா்ளிடையே டாலருக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன் தொடா்ச்சியாகவே செவ்வாய்க்கிழமை வா்த்தகத்திலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6-ஆவது நாளாக வீழ்ச்சியை சரிவைக் கண்டது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் தொடக்கத்தில் 72.30-ஆக இருந்தது. இது, இதற்கு முந்தைய தினமதிப்பான 73.29 உடன் ஒப்பிடும்போது வலுப்பெற்றே காணப்பட்டது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசு குறைந்து 73.31-இல் நிலைபெற்றது.
செவ்வாய்க்கிழமை வரையிலான ஆறு வா்த்தக தினங்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 51காசுகளை இழந்துள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து எல்கேபி செக்யூரிட்டீஸ் அதிகாரி ஜதீன் திரிவேதி கூறுகையில்,‘ கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வருவது உள்நாட்டு கரன்ஸி வா்த்தகத்தை பலவீனமாக்கி உள்ளதால் வரும் நாள்களில் ரூபாய் மதிப்பு 73.10-73.60 என்ற அளவிலேயே இருக்கும்’ என்றாா்.
வெளிநாட்டு முதலீட்டு வரத்து: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின்போது அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.503.51 கோடி மதிப்பிலான பங்குகளை நிகர அடிப்படையில் விற்பனை செய்ததாக பங்குச் சந்தைப் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்...
சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.43 சதவீதம் அதிகரித்து 73.17 டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.