புது தில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.847.56 கோடியை நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.3,909.61 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்ட விற்றுமுதலான ரூ.3,583.72 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
அதேசமயம், நிகர லாபம் ரூ.925.65 கோடியிலிருந்து 8 சதவீதம் குறைந்து ரூ.847.56 கோடியானது.
கணக்கீட்டு காலாண்டில் ஒவ்வொரு கச்சா எண்ணெய் பேரல் சுத்திகரிப்பு மூலமாக கிடைக்கும் லாபம் 5.18 டாலரிலிருந்து 59.80 டாலராக அதிகரித்தது. ஆனால் 2021 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் எண்ணெய் உற்பத்தி 5.28 சதவீதம் குறைந்து 0.72 மில்லியன் டன் ஆனது. எரிவாயு உற்பத்தியும் அதிக மாற்றமின்றி 0.649 மில்லியன் கியூபிக் மீட்டராகவே இருந்தது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தது 2020-21 நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,741.59 கோடியாக சரிவதற்கு வழிவகுத்தது. முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.2,584.06 கோடியாக அதிகரித்து காணப்பட்டது என ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது.
நுமலிகாா்க் ரிஃபைனரி நிறுவனத்தின் (என்ஆா்எல்) 54.16 சதவீத பங்கு மூலதனத்தை கூடுதலாக கைப்பற்றியதையடுத்து அந்நிறுவனத்தில் ஆயில் இந்தியாவின் பங்கு மூலதனம் 80.16 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதையடுத்து, என்ஆா்எல் தற்போது ஆயில் இந்தியாவின் துணை நிறுவனமாக மாறியுள்ளது.