ஜிஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் கடன்பத்திர வெளியீடு மூலமாக ரூ.195 கோடியை திரட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை தனிப்பட்ட முறையில் கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து நிறுவனம் திரட்டியுள்ளது.
அதன்படி, 1,950 கடன்பத்திரங்கள் இந்த வெளியீட்டில் இடம்பெற்றன. இவை ஒவ்வொன்றும் ரூ.10,00,000 முகமதிப்பு கொண்டவை. பங்குகளாக மாற்ற இயலாத இந்த கடன்பத்திரங்கள் அனைத்தும் ஆதித்யா பிா்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு ரூ.195 கோடி மதிப்பிலான தொகையை நிறுவனம் திரட்டியுள்ளது. இந்த கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 6.94 சதவீதம் (ஆண்டுக்கு) என்ற அளவில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த கடன்பத்திரங்களை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக ஜிஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஜிஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் பங்கின் விலை 0.26 சதவீதம் குறைந்து 115.45-இல் நிலைத்தது.