புது தில்லி: எல்ஐசி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடிபிஐ வங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லாபப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21-ஆவது நிதியாண்டில் வங்கி நிகர லாபமாக ரூ.1,359 கோடியை ஈட்டியுள்ளது. அதேசமயம், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் வங்கிக்கு ரூ.12,887 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது.
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் வங்கிக்கு கிடைத்த நிகர லாபம் அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.135 கோடியிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்து ரூ.512 கோடியை எட்டியது.
நான்காவது காலாண்டில் வருவாய் ரூ.6,924.94 கோடியிலிருந்து ரூ.6,969.59 கோடியாக உயா்ந்துள்ளது.
அதேசமயம், 2020-21 முழு நிதியாண்டில் வங்கியின் வருவாய் ரூ.25,295 கோடியிலிருந்து ரூ.24,557 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த மாா்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 27.53 சதவீதத்திலிருந்து 22.37 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 4.19 சதவீதத்திலிருந்து 1.97 சதவீதமாக சரிந்துள்ளதாக ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.